Wednesday, November 21, 2012

கசாப் தூக்கிலிடப்பட்டான் – உலகின் தீவிரவாதம் ஒழிந்ததாம்.




மும்பை தாக்குதல் - கசாபுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம், இந்திய மக்கள் மகிழ்ச்சியாம். 

புத்திசாலி மக்களே!

செலுத்தியவனை விடுத்து துளைத்த தோட்டாவை தூக்கிலேற்றியதால் யாருக்கேனும் பயனுண்டா?வில்லை விடுத்து அம்பின் கொம்பை உடைத்தால் அடுத்த அம்பு வராது என எண்ணும் நீ உண்மையில் அப்பாவிதானோ?

எரியும் நெருப்பில் லேசாக தண்ணியை தெளித்து விட்டு தீ அடங்கி விட்டதென சந்தோஷம் கொள்ளும் முட்டாள் மனிதனே அடியில் எரியும் விறகை எடுக்காமல் மேலே எரியும் நெருப்புக்கு தண்ணி தெளிப்பதால் என்ன பயன் என என்றாவது நீ யோசித்ததுண்டா?

ஒரு 19 வயது இளைனை மூளை சலவை செய்து அனுப்பியவனை பற்றி என்றாவது நீ யோசித்ததுண்டா? ஒரு கசாபை கொன்று விட்டோம் தீவிரவாதம் அழிந்தது என மகிழ்ச்சி அடைகிறாயே அவன் எதற்காக வந்தான். அவனை அனுப்பியவன் யார், எதற்காக நம் மீது இந்த கொலை வன்மம், எங்கு இது ஆரம்பமானது, எவன் தூண்டுகிறான்,நேரடியாக அல்லது மறைமுகமாக நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மால் இந்த சமூகத்தில் எத்தனை தீவிரவாதி உருவாகிறான் இதெல்லாம் தெரியுமா உனக்கு? 

அவனை அனுப்பிய மிருகம் இந்நேரம் அங்கே ஆயிரம் கசாபை மூளை சலவை செய்து கொண்டிருக்கும். அந்த மிருகமும் முன்பு ஒரு நாள் கசாபை போல மூளை சலவை செய்யப்பட்டதே என்பதையாவது நீ சிந்தித்திருக்கிறாயா?

இவனை எல்லாம் தூக்கில் தொங்கவிட்டால் தான் மற்ற தீவிரவாதிக்கெல்லாம் மரண பயம் வரும் என பயக்கணக்கு போடும் பைத்தியக்காரா, இவன் அங்கிருந்து கிளம்பி வரும் போதே அவனுக்கான மரணகுழியை அவனே தோண்டி வைத்துவிட்டுத்தான் வந்திருப்பான் என்பதை கூட சிந்திக்க முடியாதவனா நீ? இவனை போல இன்னும் எத்தனை எத்தனை இளைஞர்கள் உயிரை மலிவாக எண்ண யாரோ சிலரால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பதை சிந்தித்திருக்கிறாயா?

 சிந்தித்திருந்தால் நீ எப்போதோ வேரைத் தேடி போயிருப்பாய். முதல் குண்டோ முதல் தோட்டாவோ அத்தோடு முடிவுக்கு வந்திருக்கும், நம் மரணக்கணக்கிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்றும் நீ கிளையைத்தான் கழித்துக்கொண்டிருக்கிறாய் வேர் விருட்சமாய் கொண்டிருக்கிறது என்பதை பற்றி சிறு கவலையும் உனக்கில்லை.

இதன் முடிவு ஒரு கசாபை தூக்கிலிடுவதால் முடிந்து விடுவதல்ல, கசாபை உருவாக்கும் மிருகத்தை அழிப்பதும் கூட அல்ல,அதன் காரணத்தை அழிப்பது.கடவுள், மதம்,இனம்,எல்லைக்கோடு இதில் அந்த காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.இதைத்தாண்டியும் இருக்கலாம். அதை தேடிப்பிடித்து அழிக்காதவரை அந்த பிரச்சினையை தீர்க்காதவரை மும்பை தாக்குதலில் மட்டுமல்ல வன்முறையால் உலகில் கொல்லப்படும் எந்த உயிரின் ஆன்மாவும் அமைதி கொள்ளாது.

Monday, October 29, 2012

நாம் தொலைத்த தமிழ்





               உலகிலேயே தன் வரலாறு தெரியாத அல்லது தெரிந்து கொள்ள முயலாத ஒரு இனம் உண்டென்றால் அது தமிழினமாக மட்டுமே இருக்கும். நாம் சாதியாய், மதமாய்,கட்சியாய் பிரிந்து கிடந்தாலும் நம்மை தமிழன் என்ற தேசிய இனமாய் நூலிழையில் இன்னும் இணைத்துக்கொண்டிருப்பது மரணப்படுக்கையில் மிச்சமிருக்கும் இன்றைய கலப்புத் தமிழ்தான்.

             என் சாதிப் பெண்ணை எப்படி நீ பார்க்கலாம்,என் மதத்துப் பெண்ணை எப்படி நீ நோக்கலாம் என்றெல்லாம் அரிவாள் தூக்கும் இந்த தன்மானத் தமிழன் மொழியில் மட்டும் வேற்றான் மொழி கலவி புரிவதை கர்வமாய் பார்க்கிறான்.எம்மொழியும் என் மொழியுடன் புணரலாம் என புது விதி படைக்கிறான். கேட்டால் உன் தமிழ் எனக்கென்ன தந்தது என எதிர் கேள்வி கேட்கிறான் அது நம் தமிழ் என உணராமல்.


             ஒரு மொழியின் சிதைவு அந்த மொழியின் அழிவு.ஒரு மொழியின் அழிவு அந்த மொழி பேசும் இனத்தின் அழிவு. ஆண்டுகள் பல கடந்து விட்டது நாம் நம் மொழியை சிதைத்து. சிதைந்த மொழி இப்பொது அழிவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பதிவின் நோக்கம் யாரையும் சாடுவதற்கோ,எவர் மீதும் பழி போடுவதற்கோ அல்ல நாம் எல்லோருமே இதற்கு காரணகர்த்தாக்கள். நோக்கம் மிகச் சிறியது தொலைத்து விட்ட, வழக்கில் இருந்து விரட்டப்பட்ட,மொழி கலப்பால் புறந்தள்ளி புறக்கணிக்கப்பட்ட நம் தமிழை,கிடைத்தவரை அகழ்ந்து,தேடிப்பிடித்து என் வலைப்பக்கம் என்ற இந்த பெட்டகத்தில் சேகரித்து வைப்பது. அருங்காட்சியகத்தில் அடைக்கப்பட்ட நம் பழந்தமிழர் வீரக் கருவிகளை காணுவது போல, இங்கு ஒரு காலத்தில் இந்த உயிரினம் வாழ்ந்தது என்று அகழ்வாராய எலும்புகளின் மிச்சம் உதவுவதை போல இங்கே தமிழ் என்கிற தொன்மை மொழி வாழ்ந்தது என்பதன் அடையாளமாய் என் வலைதளமும் நாம் தொலைத்த தமிழ் என்கிற இந்த பதிவும்.


தமிழ் எண்கள் :

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எண்களுக்கான குறியீடை படைத்தவர்கள் நம் மூத்தோர்.எங்கோ இருக்கின்ற ரோம எண் குறியீட்டை படித்து அறிந்த நாம் தாய்த்தமிழில் எண் குறியீடு உண்டு என்ற விடயம் கூட தெரியாதிருப்பது என்பது வெட்கக்கேடு.

  ௧ = 1

  ௨ = 2

  ௩ = 3

  ௪ = 4

  ௫ = 5

  ௬ = 6

  ௭ = 7

  ௮ = 8

  ௯ = 9

  ௰ = 10

  ௱ = 100

  ௨௱ = 200

  ௩௱ = 300

  ௱௫௰௬ = 156

  ௲ = 1000

  ௲௧ = 1001

  ௲௪௰ = 1040

  ௮௲ = 8000

  ௰௲ = 10,000

  ௭௰௲ = 70,000

  ௯௰௲ = 90,000

  ௱௲ = 100,000 (லட்சம்)

  ௮௱௲ = 800,000

  ௰௱௲ = 1,000,000 (10 லட்சம்)

  ௯௰௱௲ = 9,000,000

  ௱௱௲ = 10,000,000 (கோடி)

  ௰௱௱௲ = 100,000,000 (10 கோடி)

  ௱௱௱௲ = 1,000,000,000 (100 கோடி)

  ௲௱௱௲ = 10,000,000,000 (1000 கோடி)

  ௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்தாயிரங்கோடி)

  ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)

  ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (கோடானு கோடி)

Tuesday, September 25, 2012

நான்! நீ!


அழகு ரோஜா
பேரழகானது,
உன் கூந்தலை
அடைந்ததும்!.
இப்படிக்கு நான் !!!

கவிதைகள் எல்லாம்
காணாமல் போனோர்
பட்டியலில் சேர்ந்தன
நீ பேசத்தொடங்கியதும்!
இப்படிக்கு நீ !!!

Wednesday, May 23, 2012

அனிச்சை செயலாய்......


நீ புத்தகம் வாசிக்கும்போதெல்லாம்
பக்கத்திற்கொரு முறை
இதழ் வருடி
நா தொடுகிறது உன் விரல் நுனி.
விரலாய் முடியாவிடினும்
பக்கங்களின் ஓரமாய்
பிறந்திருக்கக் கூடாதாயென
ஏங்குகிறதென் இதயம்!!!

Thursday, March 29, 2012

இப்படிக்கு உன் இரக்கமற்ற நினைவுகள்!!!


விடிந்தும் விடியாத காலை
கலைந்தும் கலையாத உறக்கம்
மறந்தும் மறையாத நினைவின் தடங்கள்

அன்றொரு நாள்
கொட்டிய மழையில்
ஒட்டியவாறு
ஒற்றை குடையில் இருவருமாய்!
நீரில் கால் பதித்து நடக்க
நிலவில் நடந்ததாய் ஞாபகம்!

அன்றொரு நாள்
கலைந்த படுக்கைக்குள்
கலையாத உறக்கத்தை
கலைத்துக்கொண்டு நுழைந்தது.
உன் விருப்பப்பாடல்
அன்றெல்லாம் உன் நினைவு
அனலாய் என்னுள்
கொதித்துக்கொண்டிருந்தது!

அன்றொரு நாள்
நாம் சென்ற பாதைகளில்
நான் மட்டும் தனியே.
நான் சென்ற பொழுது
நாம் பதித்த தடங்களை
ஒற்றையாய் தேடி அலைந்தேன்!